அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, May 22, 2012

அன்பார்ந்த ஜமாத்தார்களே ஓட்டு போடுவதற்கு முன் இதை படிப்பீர்


அன்பிற்கினிய நீடூர்-நெய்வாசல் முஸ்லிம் ஜமாஅத் வாக்காளர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,
உங்கள் வாக்கை பதிவு செய்யுமுன் இக்கட்டுரையை ஒரு முறையேனும் படியுங்கள். அல்லாஹ்அனைவருக்கும் நல்வழிகாட்ட, உதவிபுரிய போதுமானவனாக இருக்கிறான்.
பின்வரும் இறை வசனத்தை ஓர் ஆட்சித்தலைவர் தன் இலட்சியமாகக் கொள்ளவேண்டும்.
''அவர்கள் எத்தகையவர்களெனில், நாம் அவர்களுக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; ஜகாத் வழங்குவார்கள். மேலும், நன்மை புரியுமாறு ஏவுவார்கள்; தீமையிலிருந்து தடுப்பார்கள்.' (சூரா அல் ஹஜ் 22:41)
இன்று 'மஹல்லா" 'முத்தவல்லி" அமைப்பில் இருந்து துவங்கி உலக அரங்கில் பல்வேறு முஸ்லிம் நாடுகளின் ஆட்சித்தலைமை வரை எல்லா மட்டங்களிலும் முஸ்லிம்களுக்குத் தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
'அவர்கள் பொறுமையுடன் இருந்து நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக்கொண்டபோது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழிகாட்டும் தலைவர்களை அவர்களில் நின்றும் உண்டாக்கினோம்.' (சூரா அஸ் ஸஜ்தா 32:24)
மேற்கண்ட வசனங்கள், இஸ்லாமியத் தலைமைக்குரிய அடிப்படை இலக்கணமே மக்களுக்கு நேர்வழி காட்டுதல்தான் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேலும் அது ஏதோ ஒரு வழிகாட்டுதல் அல்ல. 'நம்முடைய கட்டளையைக் கொண்டு" -
அதாவது அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு வழிகாட்டுவதுதான் தலைமைக்குரிய அடிப்படைப் பண்பாகும் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.
அதாவது, முஸ்லிம்களின் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கின்ற ஒவ்வொரு முஸ்லிம் தலைமையும் தாம் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவுக்கும் அல்லாஹ்வுடைய கட்டளைகளை - வழிகாட்டுதலை - ஆதாரமாகக் காட்டக்கூடியவர்களாக இருந்திட வேண்டும்.
அந்த முடிவுகள் - வணக்க வழிபாடுகள் குறித்து இருந்தாலும் சரி, முஸ்லிம்களின் சமூக, பொருளாதார அல்லது அரசியல் பிரச்னையாக இருந்தாலும் சரியே!
இஸ்லாமியத் தலைமைக்குரிய அடுத்த இலக்கணம் தக்வா என்னும் 'இறையச்சம்". இது தலைமைக்கு மிக மிக அவசியம்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'மக்களைக் கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்". (புகாரி, முஸ்லிம்)
தமது பொறுப்பு குறித்து இறைவன் விசாரணை செய்திடுவான் என்ற அச்சம் ஒவ்வொரு தலைரிடத்தும் காணப்படிவேண்டிய அரும் பண்பாகும்.
இறையச்சம் இல்லாத ஒரு தலைவர் மக்களை நேர்வழியின் பக்கம் அழைத்துச் செல்ல எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. ஏனெனில்,
'இறையச்சம் உடையவருக்கே இந்த குர்ஆன் வழிகாட்டும்" (சூரா அல்பகரா 2:2)
தலைமைக்கு நேர்வழி கிட்டவில்லையென்றால் அவர் மக்களுக்கு எங்ஙனம் நேர்வழி காட்ட முடியும்?
எனவேதான் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட கலீஃபாக்கள், அதனை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ளாமல், 'இந்த பொறுப்பு குறித்து இறைவனுக்கு எங்ஙனம் பதில் சொல்வேன்? என்ற அஞ்சி கண்ணீர் சிந்திய நிகழ்ச்சிகளை நாம் வரலாற்றில் பார்க்கிறோம்.
இஸ்லாமியத் தலைமைக்குரிய அடுத்த பண்பு 'இல்ம்" என்ப்படும் 'இஸ்லாமிய அறிவு".
எந்த ஒரு விஷயத்தில் ஒருவனுக்கு அறிவு இல்லையோ, அந்த விஷயம் குறித்து அவன் மற்றவர்களுக்கு வழிகாட்டிட இயலாது.
எனவே இறைவனின் வழிகாட்டுதலின் பக்கம் அழைத்துச் செல்கின்ற இஸ்லாமியத் தலைமை இறைவனின் வழிகாட்டுதல் குறித்த முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
எப்போது இஸ்லாமியத் தலைமை மார்க்கத்தைக் கற்றுணர்ந்த அறிஞர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு மார்க்க அறிவைப் பெற்றிராத முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்ட்டதோ அன்றில் இருந்துதான் முஸ்லிம்களின் பிரச்னைகள் சிக்கலாக்கப்பட்டன என்பதை யாரும் மறுக்க இயலாது.
'அறிவு" (இல்ம்) என வருகிறபோது தலைவராக இருக்கின்றவர் வெறும் இஸ்லாமிய அறிவைப் பெற்றவராக இருந்தால் மட்டும் போதாது. தம்மைச் சுற்றி வாழும் ஜாஹிலிய்யாவைப் பற்றியும் அவர் முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.
இதையே கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்:
'இஸ்லாமிய அறிவை மட்டுமே பெற்றிருந்து, ஜாஹிலிய்யாவை அறியாத ஒருவன் இஸ்லாத்தையே அலைக்கழித்து விடுவானோ என நான் அஞ்சுகின்றேன்."
ஆகவே, தன்னைச் சுற்றியிருக்கும் அஞ்ஞான சக்திகள், இஸ்லாத்தை வெறுக்கும் சக்திகள், இஸ்லாத்தை வாழ்க்கை வழியாகக் கொண்டு நிற்கும் முஸ்லிம்களை வேரறுக்க வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் சக்திகள், இவற்றைப் பற்றிய அறிவைப் பெறாதவர்களைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்தினால் அவர்கள் முஸ்லிம்களை அலைக்கழித்துவிடுவார்கள்.
அடுத்து இறையச்சத்தை கொண்டு வழி நடத்தப்படும் விஞ்ஞான கல்விக்கு, ஆராய்ச்சிகளுக்கு ஆவன செய்து தருவது, இஸ்லாமியத் தலைமையின் பிறிதோர் பிரிக்க முடியாத பகுதியாகும்.
அதேபோல் ஹலாலானவற்றை நிலைநிறுத்த வேண்டும். ஹராமானவற்றை தலைகாட்ட விடாமல் தடுக்கவேண்டும்.
பலம் குன்றியவர்களை, பலமானவர்கள் அச்சுறுத்தியும், அநியாயங்களுக்கு ஆட்படுத்திடாமலும் பாதுகாத்திட வேண்டும். இப்படிப் பலங்குன்றியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களாயும் இருக்கலாம். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத சிறுபான்மையினராகவும் இருக்கலாம்.
யாரும் குற்றங்கள் செய்திட கட்டாயப்படுத்திடாத அளவுக்குச் சமுதாயச் சூழ்நிலைகளை நியாயம் நிறைந்ததாக ஆக்கி வைத்திட வேண்டும் ஆட்சியாளர்.
எல்லா நிலைகளிலேயும், எல்லாப் பிரச்னைகளிலும் குடிமக்கள் அனைவரும் நியாயம் மிக எளிதாகக் கிடைக்கும் வண்ணம் நீதி பரிபாலனத்தை நிலைநிறுத்த வேண்டும். இதில் அவரே மார்க்க அறிஞராகவும் நீதி வழங்கிட வல்லவராகவும் இருந்திட வேண்டும்.
இறைவனின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க்ள நீதிமானாக இருந்தார்கள். அவர்களைப் பின்பற்றி ஆட்சி நடத்திய நேர்வழி பெற்ற கலீஃபாக்களும் அப்படியே இருந்தார்கள். இவர்களெல்லாம் எப்படிப் பட்ட நீதியை நிலைநாட்டினார்கள் தெரியுமா?
கல்வியில் முஸ்லிம்களையும், முஸ்லிம் உலகையும் கரம் பிடித்து அழைத்துச் செல்பவராக இருக்க வெண்டும் நம்பிக்கையாளர்களின் தலைவர்.
பைத்துல் மாலில் மிகவும் கவனமுடனிருக்க வேண்டும். ஜகாத்தையும், தொழுகையையம் ஒன்றுபோலவே நிலைநாட்ட வேண்டும்.
ஆடம்பரம் சற்றும் தலைகாட்டாத மிகவும் எளிய வாழ்க்கையையே வாழ்ந்திட வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக இஸ்லாமிய சமுதாயத்தின் ஒற்றுமையை எல்லா நிலைகளிலேயும் கட்டிக்காக்கும் அளவில் தன் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களின் ஒற்றமையைக் குலைக்க எல்லா முயற்சிகளையம் மேற்கொள்வார்கள்.
முஸ்லிம் சமுதாயத்தில் சில தான் தோன்றிகள் தங்கள் அதிகாரம் நிலைக்க அல்லது தாங்கள் தலையெடுக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் சமுதாயத்தைப் பிளக்க நினைக்கலாம். இவர்கள் சில நேரங்களில் ஜாஹிலிய்ய தலைமையும் இதற்காகவே கைகோர்க்கலாம்.
இதுகுறித்தும் ஆட்சியாளர் அதிகக் கலனம் செலுத்த வேண்டும்.
எங்கெல்லாம் எப்போதெல்லாம் முஸ்லிம்களிடையே பிளவுகளுக்கான விதைகள் தூவப்படுகின்றனவே அங்கெல்லாம் விரைந்து சென்று அதனைக் களைந்திட வேண்டும்.
இறைவன் கூறுகின்றான்.
'தங்கள் இறைவனின் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலை நிறுத்துவார்கள். அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வார்கள். மேலும், நாம் அவர்களுக்கு அறித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.' (அல்குர்ஆன் 42:38)
இன்னும் சில தகுதிகள்
இன்னும் சில தகுதிகளை இங்கே சுட்டிக்காட்டுகின்றோம்.
அவைகளில் ஒன்று - 'உறுதிகொண்ட நெஞ்சம்"!
அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
'அபூதர்ரே!" நான் உம்மைப் பலவீனம் உடையவராகக் காண்கிறேன். எனவே தலைமையை விரும்பாதீர். உமது பொறுப்பில் வருபவர் இரண்டு பேராக இருந்தாலும் சரியே!"
இதில் இருந்து தெரிவது, இஸ்லாமியத் தலைமைக்குப் பலவீனம் கூடவே கூடாது என்பதுதான். எனவே பலம் தேவை. இது எப்படிப்பட்ட பலம்?
அபூபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பதவி ஏற்றதும், ஒரு பிரிவினர் 'தொழுவோம், ஆனால் ஜகாத் தரமாட்டோம்" என்ற சொன்னபோது அவர்கள் சொன்னார்கள். 'ஒரு ஒட்டகத்தின் மூக்கணாங்கயிறு அளவாக அது இருப்பினம் அதனை அவர்களிடம் இருந்து பெறும் வரையில் போர் தொடுப்பேன்."
இதுதான் உறுதி! இதுதான் பலம்!
ஒரு விஷயத்தில் இதுதான் இறைவனின் தீர்ப்பு என்று தெரிந்து விடும் பட்சத்தில் அதனைச் செயல்படுத்திடுவதற்குக் கொஞ்சம் கூடத் தயக்கம் காட்டிடக்கூடாது.
அடுத்து
இஸ்லாமியத் தலைவர் பதவிக்காக அலைபவராக இருந்திடக் கூடாது.
ஒரு தடவை இரு நபித்தோழர்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள்.அவர்களில் ஒருவர் 'யா ரசூலுல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அல்லாஹ் தங்களுக்கு அளித்துள்ள அதிகாரத்தில் ஏதாவது ஒன்றுக்கு என்னைத் தலைவராக்குங்களேன்" என்றார்.
அடுத்த நபித்தோழரும் அதுபோன்றே கேட்டுக் கொண்டார்.
அண்ணலார் மறுமொழி பகந்தார்கள்: 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! யார் பதவியைக் கேட்கிறார்களோ, யார் அதற்காக ஆசைப்படுகிறார்களோ அவர்களில் யாரையும் நான் அப்பதவிக்கு நியமிக்கவே மாட்டேன்!"
அடுத்த இஸ்லாமித் தலைமை தனது அதிகாரத்தைக் குடும்பச் சொத்தாக கருதிவிடக்கூடாது!
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பானவர், ஒருவரை தன் உறவினர் அல்லது நண்பர் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே முஸ்லிம்கள் மீது அதிகாரியாக நியமித்து விடுவார் எனில், அவர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும். (அறிவிப்பாளர் : யஸீத் பின் அபூஸு.ப்பான் ரளியல்லாஹு அன்ஹு)
அடுத்து, இஸ்லாமியத் தலைவர் எளிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்பவராக அமைந்திட வேண்டும்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டு நீதிபதி அல்லது ஆளுநராக நியமித்து அனுப்பியபோது 'முஆதே! உல்லாசம் அனுபவிப்பதில் இருந்து உம்மை நீர் காத்துக் கொள்ளும். ஏனெனில் அல்லாஹ்வின் நல்லடியார்கள் உல்லாசம் அனுபவிப்பதில்லை!" என்று அறிவுரை பகர்ந்தார்கள். (நூல்: மிஷ்காத்)
மேலும் இஸ்லாமியத் தலைமை என்பது எளிதில் அணுகக் கூடியதாக அமைந்திட வேண்டும். தலைவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு தங்களை உயர்த்திக் காட்டிக்கொள்ளக்கூடாது. இஸ்லாமியத் தலைமை பொதுமக்களின் நலன் நாடக்கூடியதாக அமைந்திட வேண்டும். பொதுமக்களை மோசடி செய்திடக்கூடாது. பொதுமக்களைத் தங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அடிமைகள் என்று கருதிடக்கூடாது. பொதுமக்ககள் தங்களை விமர்சிப்பதைத் தடை செய்தல் கூடவே கூடாது.
இவைகளெ இஸ்லாமித் தலைக்குரிய முக்கியமான பண்புகள்.
இஸ்லாமிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தகுதிமிக்க தலைவர்களையும் நாம் பெற்றே வந்திருக்கின்றோம். தகுதியில்லாத தலைவர்களும் நம்மை ஆட்டிப்படைத்திருக்கின்றார்கள் என்பத புரியும்.
நமக்குத் தலைமை தாங்கிடும் இஸ்லாமியத் தலைவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை நாம் துல்லியமாக அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
அல்லாஹ்வின் உதவியால் ஜமாத்தார்கள் விருப்பபடியே ரகசிய வாக்கெடுப்புக்கு தேதி அறிவித்தாயிற்று. இன்ஷா அல்லாஹ் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கெல்லாம் பயப்படாமல் அல்லாஹ்விற்கு மட்டுமே பயப்பட்டு ஊரின் நலனில் அக்கறை கொண்டு யாருக்காகவும் பின்வாங்காமல் இருக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
-ஊர் நலன் விரும்பிகள்.
நன்றி: www.nidur.info

No comments:

Post a Comment